அட சொல்லுங்கடா வந்து அள்ளுங்கடா

புதுக்கோட்டையில் பிறந்த மக்களிசை பாடல்கள் வரிசை - 06

பேல மட்டும் நீங்களா
            அட சொல்லுங்கடா
அள்ளி போட மட்டும் நாங்களா
             வந்து அள்ளுங்கடா

ஒரு மிருகம் பேண்டதை
             அட ஒரு மிருகம் அள்ளல
அட ஆறறிவு கொண்ட முண்டமே
             உன் அறிவுக்கு இது ஏன் எட்டல
மலக்குழியில சாகுறோம்
             அட கேட்க ஒரு துப்பில்ல
இனி கரைச்சு ஊத்தி அடிக்கணும்
             அட அதுல ஒன்னும் தப்பில்ல

ஆள மட்டும் நீங்களா
            அட சொல்லுங்கடா
செத்து மாள மட்டும் நாங்களா
             வந்து அள்ளுங்கடா

மூக்கைப் பிடிச்சி ஒதுங்கி போகும்
            அய்யா அம்மா மார்களே
நாங்க மூச்சி முட்டித் தான் செத்தக்கதை
             இங்க நூறு உண்டு இந்த நாட்டுல
சீக்கு பிடிச்சு சீலு பிடிச்சு
              கையை வைச்சோம் எங்க சோத்துல
அட கேட்க கொமட்டுதுன்னா ஆப்பு வைச்சு நீங்க
               சொருகிக்கோங்க உங்க சூத்துல


உண்ட உணவு தொண்டைக்குள்ள
               போறதெல்லாம் பீயடா
பொது தொண்டு தொண்டு என்கிறாயே
                எப்ப அள்ளுனாயடா
மண்டைக்குள்ள மூளை தானா
                மலப்புழுவா நீ கூறடா
இதை கண்டுக்காத நீதி மேல
                பேல போறோம் நாங்க பாருடா

ஆள மட்டும் நீங்களா
            அட சொல்லுங்கடா
செத்து மாள மட்டும் நாங்களா
             வந்து அள்ளுங்கடா
            
பூக்குழியின்னு தீக்குழிகுள்ள
             சாமி ஆடுகின்ற மக்களே
இந்தப் பீக்குழிகுள்ளே இறங்கி ஏற
              நீங்க நேர்ந்துக்கிட்டு தான் வாங்களேன்

ஈக்களுக்கு முன்னே எழுந்து
               எடுக்கிறது இங்க நாங்களே
தட்டிக் கேட்க நாங்க இனி துணிஞ்சி நிற்போம்
                அட நாத்தம் பிடிச்சு சாங்கலே

செத்து செத்து தான் பொழைக்கிறதாம்
                ஊரு சொல்லி கேட்குறோம்
இந்த பொழைப்பினால் சாவைக் கூட்டி
                தலைக்கு மேல தூக்குறோம்
விதியைச் சொன்ன மனுவைக் கிழிச்சு
                குண்டி தொடைச்சி போடுவோம் (2)
உங்க சாமிகள வந்து எங்க பீயத்தான்
               எடுக்கச்சொல்லி கூடுவோம்.

பேல மட்டும் நீங்களா
            அட சொல்லுங்கடா
அள்ளி போட மட்டும் நாங்களா
             வந்து அள்ளுங்கடா

ஒரு மிருகம் பேண்டதை
             அட ஒரு மிருகம் அள்ளல
அட ஆறறிவு கொண்ட முண்டமே
             உன் அறிவுக்கு இது ஏன் எட்டல
மலக்குழியில சாகுறோம்
             அட கேட்க ஒரு துப்பில்ல
இனி கரைச்சு ஊத்தி அடிக்கணும்
             அட அதுல ஒன்னும் தப்பில்ல

ஆள மட்டும் நீங்களா
            அட சொல்லுங்கடா
செத்து மாள மட்டும் நாங்களா
             வந்து அள்ளுங்கடா (2)

வந்து அள்ளுங்கடா!!! வந்து அள்ளுங்கடா!!!
வந்து அள்ளுங்கடா!!! வந்து அள்ளுங்கடா!!!!


இப்பாடலை எழுதியவர் கவிஞர் இரா. தனிக்கொடி. புதுக்கோட்டையில் வசித்து வரும் இவர் முன்னணி திரைப்படப் பாடலாசிரியர். தமுஎகச மாநிலக் குழுவில் ஒருவர்.  மக்கள் செயற்பாட்டாளர் தோழர் திவ்யா இயக்கிய கக்கூஸ் ஆவணப் படத்தில் இப்பாடல் இடம்பெற்றது. ஆர்.பிரபாகர் இசையில் பாடகர் சரவணன் இப்பாடலைப் பாடினார்.  Leftside ஊடக மையம் இப்படத்தை வெளியிட்டது. இப்பாடல்  மலம் அள்ளும் தோழர்களின்  மனக்குமுறல். 

பல்வேறு எதிர்ப்புகளைத் தாண்டி இப்பாடலும் படமும் வெளியானது. இப்பாடல் வரிகளை நாம் வாசிப்பதிலும் கடந்துபோவதிலும் நமக்குளிருக்கும் இளகிய, இறுகிய மனநிலையை உணரக்கூடுவோம்,,



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொன்மகளே தேவியம்மா பொற்பனை காளியம்மா

ஆக்காட்டி ஆக்காட்டி -நீ

புதுகையில் அருள்செய்யும் புவனேஸ்வரி!